குற்றம்

’காளி’ உடை அணிந்த இளைஞர் சரமாரியாகக் குத்திக் கொலை!

webteam

காளியை போல உடையணிந்த இளைஞரை கத்தியால் சரமாரியாகக் குத்திக்கொன்ற சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியில் உள்ள தேசிய சிறு தொழில் மைய வளாகத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பலத்த வெட்டுக்காயத்துடன் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அந்த ஆண், காளி போல உடையணிந்திருந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது உயிரிழந்தது, கல்கஜ் மந்திர் பகுதியை சேர்ந்த காலு என்கிற கலுவா என்பது தெரிய வந்தது. பின்னர் போஸ்ட்மார்டம் முடிந்ததும் அவர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

காலு எப்படி கொல்லப்பட்டார் என்கிற விசாரணையில் இறங்கினர். அப்போது அந்தப் பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து, நவீன் (20), அமன் குமார் சிங் (20), மோகித் குமார் (25), சஜல் குமார் (19) ஆகிய நான்கு பேரை பிடித்தனர். அவர்களுடன் மூன்று சிறுவர்களும் சேர்ந்து காலுவை கொன்றதை ஒப்புக்கொண்டனர். விசாரணையில் எப்படிக் கொன்றோம் என்பதை போலீசிடம் அவர்கள் நடித்துக் காட்டியுள்ளனர்.

அதாவது காலு, கல்கஜி மந்திர் பகுதியை சேர்ந்தவர். சிறுவயதில் பெற்றோரை இழந்த இவர் அங்குள்ள தர்மசாலாவில் வளர்ந்தவர். திருநங்கைகளுடன்தான் எப்போதும் பேசிக்கொண்டிருப்பாராம். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தன்னை, மகா காளி தெய்வமாகப் பாவித்துக் கொள்ளும் காலு, அன்றைய தினங்களில் மட்டும் கருப்பு சல்வார் மற்றும் சிவப்பு துப்பட்டா, கொலுசு அணிந்து செல்வது வழக்கம்.

சம்பவம் நடந்த அன்றும் அப்படித்தான் சென்றிருக்கிறார். அவரைப் பார்த்ததும் அந்த இளைஞர்கள் கிண்டல் செய்துள்ளனர். அவர்கள் குடி போதையில் இருந்ததால், ‘சாமியை கிண்டல் செய்யக் கூடாது’ என்று கூறியிருக்கிறார் காலு. இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. 

பின்னர் அந்த நான்குபேரும் காலுவை காட்டுக்குள் இழுத்துச் சென்று கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளனர். நெஞ்சு, முகம், கழுத்து என குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் காலு சரிந்து விழுந்ததும் அவர்கள் தப்பியோடியுள்ளனர். இத்தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர். 
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் நவீன் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார்.