குற்றவாளி pt desk
குற்றம்

பேஸ்புக் லிங்க்-ஐ தொட்ட சுங்க அதிகாரியின் ரூ 39 லட்சம் பறிப்பு - குஜராத்தை சேர்ந்த குற்றவாளி கைது

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை மாங்காட்டைச் சேர்ந்தவர் மனோரஞ்சன் குமார். இவர், மத்திய சுங்கவரி மற்றும் கலால் வாரியத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் ஓய்வு நேரங்களில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் நேரத்தை செலவழிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி முகநூலை பக்கத்தை பயன்படுத்தியுள்ளார். அப்போது அதில், டிரேடிங் தொடர்பான விளம்பரம் வந்துள்ளது.

Online fraud

இதையடுத்து அதில் கொடுக்கப்பட்ட லிங்கை தட்டிய சுங்க அதிகாரி, ஆசிஷ் சஹாஸ் டால் ஸ்ட்ரீட் ட்ரேடிங் சாம்பியன்ஸ் விஐபி 2 என்ற வாட்ஸ் அப் குழுவில் இணைந்துள்ளார். அதன் பின்னர் 'செஸ் செஸ்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் வழிகாட்டுதலின்படி பல்வேறு பங்குகளை வாங்க கூறியதை அடுத்து அடுத்தடுத்து பங்குகளை பெறுவதற்காக பல்வேறு வங்கிக் கணக்கு மூலம் பணம் செலுத்தியிருக்கிறார். இதில் அவர், கிட்டத்தட்ட 39 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.

இந்நிலையில், ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், இதுகுறித்து ஆவடி காவல் ஆணையராக மத்திய குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து விசாரணை செய்த சைபர் க்ரைம் போலீசார், லிங்க் அட்ரஸை வைத்து மோசடி கும்பல் குஜராத் மாநிலத்தவர்கள் என்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் குஜராத் மாநிலம் ஆனந்தை பகுதியை சேர்ந்த பிரேம் ராம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Arrest

விசாரணையில், இந்தியாவின் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த 44 நபர்களுக்கு இந்த லிங்க்-ஐ அனுப்பி அதன் மூலம் சுமார் 7.5 கோடி வரை அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரேம்ராமை கைது செய்து சென்னை அழைத்து வந்த போலீசார், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.