குற்றம்

கல்லூரி வளாகத்திலேயே மாணவனுக்கு அரிவாள் வெட்டு

webteam

முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டத்தில் மாணவனை கல்லூரி வளாகத்திலேயே மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பில்லூரைச் சேர்ந்த ராஜா என்பவர் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தாவரவியல் பிரிவில் பயின்று வருகிறார். அவர் கல்லூரி வளாகத்திற்குள் சென்ற போது அடையாளம் தெரியாத சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். 

தகவல் அறிந்து வந்த நகர காவல்துறையினர், மாணவன் ராஜாவை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து நகர காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி தப்பியோடிய மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். படுகாயம் அடைந்த மாணவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.