beauty parlour attack pt desk
குற்றம்

சென்னை: ’குறைந்த கட்டணம் வசூலிப்பதா?’ அழகு நிலைய உரிமையாளர்கள் இடையே பயங்கர மோதல் - இருவர் கைது!

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னை அண்ணா நகர் சாந்தி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா. இவர் அதே பகுதியில் 'சோனா டி பாரிஸ்' என்ற பெயரில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி மாலை B3 Bridel Studio என்ற அழகு நிலைய உரிமையாளர் ஷ்யாம் குமார், மேலாளர் ஆனி, மற்றும் மூன்று பெண்கள் உள்ளிட்டோர் வந்து, தன்னையும் தனது கணவர் லோகேஷையும் தாக்கியும் அழகு நிலையத்தில் இருந்த பொருட்களை உடைத்துச் சென்றதாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Beauty parlour attack

அதில், தனது 'சோனா டி பாரிஸ்' என்ற அழகு நிலையத்தில் மற்ற அழகு நிலையங்களில் வசூலிப்பதை விட குறைவான கட்டணத்தில் சேவை செய்து வருவதாகவும், இதனால் தங்கள் பகுதியில் இருக்கும் மற்ற அழகுநிலைய உரிமையாளர்கள் தங்களிடம் ஏன் குறைந்த கட்டணம் வாங்குகிறாய்? என கேட்டு பலமுறை அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 22 ஆம் தேதி மாலை தங்களது அழகு நிலையத்திற்கு வந்த பி3 பிரைடல் ஸ்டுடியோ உரிமையாளர் ஷ்யாம், அவரது மேலாளர் ஆனி உள்ளிட்ட மூன்று பெண்கள் மற்றும் ஆண்கள் சிலர் உள்ளே வந்து குறைந்த கட்டணம் வாங்குவதற்காக அநாகரீகமாக பேசி தன்னையும் தனது கணவரையும் கொடூரமாக தாக்கியதுடன் அழகு நிலையத்தில் இருந்த பொருட்களை உடைத்துச் சென்றதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

Beauty parlour attack

இந்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்துதல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள அண்ணா நகர் போலீசார், டீ3 பிரைடல் அழகு நிலைய உரிமையாளர் ஷ்யாம் உள்ளிட்ட இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மற்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, பியூட்டி பார்லரில் இருதரப்பினரிடையே இடையே நடந்த வாக்குவாதம் மற்றும் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்ட காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.