Arrested pt desk
குற்றம்

சென்னை | நீச்சல் பயிற்சிக்குச் சென்ற 10 வயது சிறப்பு சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம் - இருவர் கைது

ஜெ.அன்பரசன்

சென்னை கொளத்தூர் அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரத்னகுமார் - ராணி தம்பதியர். இவர்களுக்கு கீர்த்தி சபரீஸ்கர் (10) என்ற மகன் இருந்தார். சிறப்பு குழந்தையான இவருக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பெரியார் நகரில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சி பெற வழக்கம் போல் நேற்று மாலை சிறுவன் தனது பெற்றோருடன் சென்றுள்ளார். அப்போது, தாய் ராணி சிறுவனின் அருகில் இருந்து கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென சிறுவன் நீரில் மூழ்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் ராணி, பயிற்சியாளரிடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, சிறுவன் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கியுள்ளார். இதையடுத்து ராணி, தனது கணவருடன் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நீச்சல் பயிற்சி மையத்தின் உரிமையாளர் காட்வின் மற்றும் பயிற்சியாளர் அபிலாஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.