குற்றம்

சென்னை: சார் லிப்ட் ப்ளீஸ்... லிப்ட் கேட்டு இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

kaleelrahman

மாங்காட்டில் லிப்ட் கேட்டு பயணித்து, லிப்ட் கொடுத்தவரை தாக்கி மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்பதுபோல் நடித்து மோட்டார் சைக்கிளில் பயணித்து பின்னர் அவர்களை தாக்கி மோட்டார் சைக்கிள் திருடும் சம்பவம் அதிகளவில் நடந்து வந்தது. இது குறித்து மாங்காடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தார்.

இந்த நிலையில் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த அருண் (21), என்ற நபரை பிடித்து விசாரணை செய்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். அவரிடம் விசாரணை செய்தபோது இரவு நேரங்களில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போலீசார் கெடுபிடி அதிகம் இருக்காது என்பதால் லிப்ட் கேட்பதுபோல் நடித்து லிப்ட் கொடுப்பவர்களின் பின்னால் அமர்ந்து சிறிது தூரம் சென்றவுடன் அவர்களை தலையில் தாக்கியும் கத்தியை காட்டி மிரட்டியும், அவர்களை இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை திருடி சென்று விடுவதாக தெரிவித்தார்.


இதனையடுத்து அவரிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். லிப்ட் கேட்பது போல் நடித்து லிப்ட் கொடுப்பவர்களை தாக்கி மோட்டார் சைக்கிளை திருடிச் செல்லும் நபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.