Accused pt desk
குற்றம்

சென்னை: முன்னாள் காதலியுடன் பேசுவதா? தனியார் நிறுவன ஊழியர் அடித்துக் கொலை – ஒருவர் கைது

webteam

செய்தியாளர்: சாந்தகுமார்

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் ஹரிஹரன் (34). இவர், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிதி பிரிவில் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த தரணிதரன் (34) என்பவர் டெவலப்மெண்ட் மேனேஜராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அதே நிறுவனத்தில் பணியாற்றும் தரணிதரனின் முன்னாள் காதலியுடன் ஹரிஹரன் பேசி வந்துள்ளார்.

Police station

இந்தநிலையில், நேற்று இரவு ஹரிஹரன் மது அருந்திவிட்டு, தான் பணிபுரியும் அலுவலகம் அருகே வந்து "நான் உன் முன்னாள் காதலியுடன் பேசி வருகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும்" என தரணிதரனுக்கு போன் செய்து அவரை கிண்டல் செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அலுவலகத்தில் இருந்து கீழே வந்த தரணிதரனுக்கும் ஹரிஹரனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த தரணிதரன், ஹரிஹரனின் நெற்றி மற்றும் நெஞ்சில் குத்தியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே ஹரிஹரன் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து தரணிதரன் போலீசில் சரணடைந்தார். அவரை துரைப்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.