குற்றம்

சென்னை: குடும்ப தகராறில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்

kaleelrahman

சென்னை மாதவரத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் தச்சூர் பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட் லாரன்ஸ் (48). அப்பகுதியில் தச்சு தொழில் செய்து வரும் இவர், மாதவரம் பால்பண்ணை அருகேயுள்ள எம்.எம்.டி.ஏ முதல் தெருவில் வாடகை வீட்டில் மனைவி சரோவர்ஷா (41), இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.


இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் லாரன்ஸ் தனது மனைவியை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சரோவர்ஷா சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் காவல்துறையினர் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவரை தேடி வருகின்றனர்.