Accused pt desk
குற்றம்

சென்னை: வாட்ஸ் ஆப் குழு அமைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை! போலீஸ் சோதனையில் சிக்கிய 5 பேர்

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து, மாங்காடு இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் மாங்காடு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மாங்காடு அடுத்த கோவூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபர்களை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

Police station

இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது பிடிபட்டவர்கள் மாங்காடு அடுத்த கோவூர் பகுதியைச் சேர்ந்த ஈனோக் (28), தாமோதரன் (என்ற) அப்பு (27), சிக்கராயபுரத்தை சேர்ந்த விஷ்ணு (25), சரத்குமார் (25), என்பது தெரியவந்தது.

இவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (32), என்பவரிடமிருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஐந்து பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா, 75 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், இவர்கள் போலீசாரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வாட்ஸ் ஆப் குழு அமைத்து கல்லூரி மாணவர்களை குறி வைத்து இரவு நேரங்களில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.