குற்றம்

சென்னை: சூதாட்டம் விளையாடிய எஸ்.ஐ உட்பட 15 பேர் கைது

webteam

சென்னையில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய காவல் உதவி ஆய்வாளர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பழைய பெருங்களத்தூர் பாரதி நகர் 1வது தெருவில் உள்ள வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக சென்னை மாநகர காவல் ஆணையருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அவர் பரங்கிமலை துணை ஆணையருக்கு தகவல் தெரிவித்து இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் நேற்று இரவு சம்பவ இடத்திற்குச் சென்ற தனிப்படைப் போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்தனர். அப்போது அங்கிருந்து இருவர் தப்பியோடிய நிலையில் அவர்களையும் இரவே பிடித்த தனிப்படையினர் பீர்க்கன்கரணை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட ஒருவர் பாலுசெட்டிசத்திரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சம்பத்(58) என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது மட்டுமல்லாமல் ஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அதிகாரி மூர்த்தி(59), பொன்னுசாமி(56), அருள்ஜோதி(50), பிரபுதாஸ்(42), கிருஷ்ணன்(45), புருசோத்தமன்(27), ஜெயகுமார்(48), ராஜா(45), செல்வராஜ்(69), ராஜ்குமார்(30), தங்கராஜ்(53), சங்கர்(42), கிருஷ்ணன்(43), வெங்கடேஷ்(29) ஆகிய 15 பேர் மீதும் சட்ட விரோத சூதாட்டம் விளையாடியதாக வழக்குப்பதிவு செய்த நிலையில் அதன் பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2 மாதமாக அந்த வீட்டில் சூதாட்டம் நடைபெற்றதும், இது குறித்தான தகவல் பீர்க்கன்கரணை காவல் ஆய்வாளருக்கு கவனத்திற்கு வந்த பின்னரும் அதை அவர் கண்டுகொள்ளாமல் இருக்கவே, அந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு சென்றதும் தெரியவந்துள்ளது.