Accused pt desk
குற்றம்

சென்னை: மதுபோதையில் தகராறு செய்த மூத்த மகன்; இளைய மகனுடன் சேர்ந்து தந்தையே கொன்று எரித்த கொடூரம்!

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆசைமணி (60). இவரது மூத்த மகன் விஜய் (35), இளைய மகன் அஜய் (26). இவர்களில், மூத்த மகன் விஜய்க்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரே மாதத்தில் மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில், கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி வீட்டில் தினமும் தகராறு செய்து வந்துள்ளார்.

சுடுகாட்டுப் பகுதி

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் விஜய் வீட்டிற்கு போதையில் வந்துள்ளார். பின்னர் அவர் தனது தந்தை ஆசைமணி மற்றும் தம்பி அஜய் ஆகியோருடன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து விஜய்யை கட்டையால் அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளனர். இதையடுத்து அவரது சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிலேயே வைத்திருந்தனர்.

இதையடுத்து யாருக்கும் தெரியாமல் சடலத்தை எங்கேயாவது கொண்டு சென்று எரித்து விட்டு வரலாம் என்று திட்டமிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நேற்று பிற்பகலில் சடலத்தை செட்டியார் அகரம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத சுடுகாட்டுப் பகுதிக்கு கொண்டு வந்து சுடுகாட்டில் வைத்து எரித்து விட்டனர். இந்த நிலையில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, செட்டியார் அகரம் சுடுகாட்டில் மர்மமான முறையில் சடலம் ஒன்று எரிக்கப்படுவதாக தொலைபேசி தகவல் வந்துள்ளது.

Police station

இது குறித்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து செட்டியார் அகரம் சுடுகாட்டிற்கு மதுரவாயல் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு எரிந்த நிலையில் கிடந்த விஜய் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெளியான தகவலை அடுத்து விஜய்யை கொலை செய்த தந்தை ஆசைமணி மற்றும் இளைய மகன் அஜய் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.