Chain Snatching Civil Engineer Arunachalam pt desk
குற்றம்

“யூட்யூப் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்டேன்” - சிக்கிய சிவில் இன்ஜினியர் பரபரப்பு வாக்குமூலம்!

webteam

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜபுரம், நேதாஜி தெருவை சேர்ந்தவர் சீதாலட்சுமி (70). இவரிடம் சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இரண்டு சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றார். அதே போல, கிழக்கு தாம்பரம், ஆஞ்சநேயர் தெருவில் நித்திய சுபா (49) என்பவரிடமும் ஐந்து சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றார். இந்த இரண்டு சம்பவங்களும் சிசிடிவி கேமராவில் பதிவாகி அதில் குற்றவாளி செயினுடன் தப்பி செல்வது பதிவாகி இருந்தது.

Civil Engineer Chain Snatching CCTV footage

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையனை தேடிவந்தனர். அதில் செயினை பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிய இளைஞர் எங்கெல்லாம் சென்றார் என்று பார்த்தபோது அவர், காமராஜபுரம், மப்பேடு, அகரம், பெருங்களத்தூர், முடிச்சூர், படப்பை என சென்று இறுதியாக மடிப்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டிற்குச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த நபர், கோவில்பட்டியை சேர்ந்த அருணாச்சலம் (27) எனவும், மடிப்பாக்கம், ராம் நகர் பகுதியில் குடும்பத்துடன் சொந்த வீட்டில் தற்போது வசித்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தெரியவந்தவை...

பி.இ சிவில் இன்ஜினியரிங் முடித்து வேலை கிடைக்காததால் ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் செலுத்தியுள்ளார் அருணாச்சலம். அதில் இரண்டு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட பின்னர் அவரது தங்கையின் 10 சவரன் நகைகளை வங்கியில் வைத்து அந்த பணம் மற்றும் கடனாக பெற்ற பணத்தில் மீண்டும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு சுமார் 14 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார்.

Civil Engineer Chain Snatching CCTV footage

இதன் பின்னர் ரேபிடோவில் பைக் ஓட்டி வந்ததோடு, யூடியூப் வீடியோக்களை பார்த்து செயின் பறிப்பில் ஈடுபடலாம் என முடிவு செய்த அவர், சாலைகளில் தனியாக செல்லும் பெண்களை நோட்டமிட்டு சீதாலட்சுமி, நித்திய சுபா ஆகிய இருவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டிருக்கிறார். மேலும், போலீசில் சிக்காமல் இருக்க வாகன பதிவெண்ணை மாற்றி பயன்படுத்தியுள்ளார். வரும் 10 ஆம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்