குற்றம்

சென்னை: ஆட்டோவில் பயணிப்பதுபோல் நடித்து ஓட்டுநரை கத்தியால் வெட்டிவிட்டு ஆட்டோ கடத்தல்

சென்னை: ஆட்டோவில் பயணிப்பதுபோல் நடித்து ஓட்டுநரை கத்தியால் வெட்டிவிட்டு ஆட்டோ கடத்தல்

kaleelrahman

சென்னை ஆட்டோவில் பயணிப்பதுபோல் நடித்து ஆட்டோ ஓட்டுநரை தாக்கிவிட்டு ஆட்டோவை கடத்திச் சென்ற 3 பேரை திருவான்மியூர் காவல்துறையினர் கைது செய்தனர்.


சென்னை செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (40). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த 29-ஆம் தேதி இரவு திருவான்மியூர் காவல்நிலைய சரகத்தில் உள்ள எம்.ஜி.சாலையில் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வந்தபோது, சவாரி போவதுபோல் ஆட்டோவை மறித்து மூன்று பேர் ஆட்டோவில் ஏறியுள்ளனர். சிறிது நேரத்தில் அந்த மூன்று பேரும், கத்தியால் ஆட்டோ ஒட்டுநரின் கை, கால் மற்றும் முகத்தில் வெட்டிக் காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

பின்னர் ஓட்டுநரிடம் இருந்து ஆட்டோவையும், பணத்தையும் பிடுங்கிக் கொண்டு மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் செல்வம், திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து குற்றவாளிகளை கண்டறிய ஆய்வாளர் அன்புகரசன், உதவி ஆய்வாளர், சதீஷ்குமார், தலைமை காவலர்கள் கோபால், கருணாகரன் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தேவேந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

புகார்தாரர் தெரிவித்த அங்க அடையாளங்கள் மற்றும் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு ஆராய்ந்ததில் ஏற்கெனவே பல வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய தென்றல் நகரைச் சேர்நத முன்னாள் குற்றவாளிகளான சேட்டு (எ) ஜெயகுமார் (34), சத்தியா (எ) சத்தியமூர்த்தி (32) மற்றும் கண்ணகி நகர் பகுதியைச் சேரந்த டேவிட் (24) என்பதும் கண்டறியப்பட்டது.


இதையடுத்து இவர்கள் 3 பேரும் திண்டிவனத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து விரைந்த தனிப்படையினர் திண்டிவனம் அருகேயுள்ள ஈச்சேரி கிராமத்தில் பதுங்கியிருந்த மூவரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து, வழிப்பறி செய்யப்பட்ட ஆட்டோ மற்றும் குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் முதலியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட இவர்கள், விசாரணை முடித்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

புகார் பெறப்பட்ட 8 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ததோடு வழிப்பறி செய்யப்பட்ட ஆட்டோவையும் மீட்டனர்.