Accused pt desk
குற்றம்

சென்னை: இன்ஸ்டா காதலியை திருமணம் செய்த மறுநாளே வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணம்.. சிக்கிய இளைஞர்!

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

ஆவடியை அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக சென்னை கேளம்பாக்கம், சர்ச் தெருவைச் சேர்ந்த பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 2022ல் மதுராந்தகம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

Police station

திருமணத்துக்குப் பின் அந்தப் பெண்ணிடம் நகை, பணம் கேட்டு துன்புறுத்திய பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங், ஒருகட்டத்தில் அவரை பிரிந்து தன் வீட்டிற்குச் சென்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுடன் இருந்த பிற தொடர்புகளையும் துண்டித்துள்ளார். இதனால் அந்தப் பெண் அவரை தேடி கேளம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங், காதல் திருமணம் செய்த அடுத்த நாளே வீட்டில் பார்த்த பெண்ணையும் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முதல் மனைவி, பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங்கிடம் இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது “முதல் திருமணம் குறித்து வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன்” என மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட முதல் மனைவி பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இரு பெண்களை ஏமாற்றிய நபர்

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கேளம்பாக்கத்தில் தலைமறைவாக இருந்த பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.