குற்றம்

சென்னை - மாங்காடு: சொத்துக்காக அக்காவை கொலை செய்து நாடகமாடியதாக தங்கை கைது!

kaleelrahman

சென்னை - மாங்காட்டில் சொத்து தகராறில் அக்காவை கொலை செய்துவிட்டு நாடகமாடியதாக தங்கை கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான தங்கையின் கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பு வெளியிட்ட தகவல்: சென்னை - மாங்காடு, சந்திரசேகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வானை (40), இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது தங்கை லட்சுமி இன்று அதிகாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது தெய்வானை கொலை செய்யப்பட்டு, இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீசார் தெய்வானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தங்கையே அக்காவை கொலை செய்த அதிர்ச்சி தகவல் அம்பலமானது. இதையடுத்து லட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


இந்த விசாரணையில் தெய்வானை கடந்த சில ஆண்டுகளாக துபாயில் தங்கி வேலை செய்து மாதம்தோறும் தங்கைக்கும், தெய்வானையின் மகனுக்கும் பணம் அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், தெய்வானையின் மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயில் இருந்து சென்னை வந்த தெய்வானையிடம் லட்சுமியின் கணவர் ரமேஷ் குமார் குடித்துவிட்டு தகராறு செய்ததால் இருவரையும் வீட்டைவிட்டு தெய்வானை வெளியேற்றினார்.


மேலும், இவரது சொத்தில் பங்கு இல்லை என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி ரமேஷுக்கு ஊரில் சொந்தமான சொத்துக்களையும் அவருக்கு தர விடாமல் தெய்வானை தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவி இருவரும் நேற்று அதிகாலை தெய்வானையின் வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து உள்ளே சென்று சத்தம் போடாமல் இருக்க தெய்வானையின் வாயை லட்சுமி பொத்திக் கொண்டார் ரமேஷ் எடுத்து வந்த கத்தியால் தெய்வானையை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இந்தக் கொலையை மறைக்க நேற்று மாங்காடு போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் ஒன்றை அளித்தார். அதில் தான் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் தனது வாயில் மதுபானத்தை ஊற்றி விட்டு தன்னை தாக்கியதாகவும், அதற்கு காரணம் தனது அக்கா தெய்வானை என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து தகராறில் உடன் பிறந்த அக்காவை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கையை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது கணவர் ரமேஷை தேடி வருகின்றனர்.