குற்றம்

சென்னை: கடிகாரக் கடையில் ஏமாற்றிய போலி உதவி ஆய்வாளர் கைது

kaleelrahman

உதவி ஆய்வாளர் எனக்கூறி கடிகார கடையில் ஏமாற்றிய போலி உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை அடையாறு, எல்.பி.சாலையில் சத்யா டைம்ஸ் என்ற வாட்ச் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இருதினங்களுக்கு முன்பு, போலீஸ் சீருடையில் வந்த நபர் தன்னை காவல் உதவியாளர் என அறிமுகம் செய்து வாட்ச் மாடல்களை பார்த்துள்ளார்.

பின்னர், 22 ஆயிரம் மதிப்பிலான இரண்டு வாட்ச்களை வாங்கியுள்ளார். இதற்கு கடை ஊழியர்கள் பணம் கேட்டபோது, வீடு அருகில்தான் உள்ளது. பணம் எடுத்து வருகிறேன் எனக்கூறி கடை ஊழியர் ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது இந்திராநகர் அருகே சென்றபோது, திடீரென அந்த நபர் ஓட்டம் பிடித்தார். இது குறித்து புகார் கொடுக்கப்பட்ட நிலையில், புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய திருவான்மியூர் போலீசார், அந்த நபர் வடபழனி, பகவன் காலனியைச் சேர்ந்த சிவா (40), என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.