குற்றம்

அதிக வீயூஸ்காக அரசு திட்டங்கள் குறித்து போலி அறிவிப்புகள் வெளியிட்ட யூடியூபர் கைது!

அதிக வீயூஸ்காக அரசு திட்டங்கள் குறித்து போலி அறிவிப்புகள் வெளியிட்ட யூடியூபர் கைது!

webteam

அரசு திட்டங்கள் என கூறி போலி அறிவிப்புகளை வெளியிட்ட ’புதிய அறிவிப்புகள்’ யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அதிக வருமாத்திற்காக பதிவிட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை கிழக்கு தாம்பரம், பாரதமாதா தெருவை சேர்ந்தவர் கார்த்தி(37), இவர் தாம்பரம் மாநகராட்சி 48வார்டில் மாமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் அவரது மொபைலில் யூடியூப் பார்த்தபோது ரேசன் அட்டைக்கு ஆயிரம் ரூபாய், உள்ளிட்ட 4 அறிவிப்புகள் கொண்ட வீடியோவை பார்த்துள்ளார். அதில் முண்ணனி தொலைக்காட்சிகளின் தம்ப்நெயில் வைக்கப்பட்டிருந்ததை அடுத்து, திமுக மாமன்ற உறுப்பினர் நேராக நியாய விலைக்கடைக்கு சென்று இந்த அறிவிப்பு குறித்து கேட்டுள்ளார். அதற்கு கடைக்காரர் இது போன்ற அறிவிப்புகள் ஏதும் வரவில்லை என கூறியதின் பேரில் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேன்கனிக்கோட்டை, நாகிரெட்டிபாளையத்தை சேர்ந்த புதிய அறிவிப்புகள் யூடியூப் சேனல் உரிமையாளர் ஜனார்த்தன்(22) என்பவரை கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் பொறியியல் பட்டதாரியான அவர் தனியார் தொலைக்காட்சியில் வந்த செய்தியை பார்த்து யூடியூபில் பதிவிட்டதாக கூறினார். அப்படி பதிவிட்டால் தான் அதிக பார்வையாளர்களும், அதிக வருமானமும் வரும் என்று கூறியுள்ளார். பின்னர் அவர் சேலையூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.