Tragedy pt desk
குற்றம்

செங்கல்பட்டு: மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறு - நண்பனை கொன்று புதைத்ததாக 3 நண்பர்கள் கைது

webteam

செய்தியாளர்: உதயகுமார்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் என்எச் 2 சீதக்காதி தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் என்பவரது மகன் விக்னேஷ். கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள அசஞ்சர்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்த இவர், தற்போது வீட்டிலிருந்தே வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற விக்னேஷ் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், விக்னேஷின் தந்தை தங்கராஜ் மறைமலைநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை செய்தபோது, பல அதிர்ச்சிகர தகவல்கள் தெரியவந்துள்ளன.

விக்னேஷ் காணவில்லையென போஸ்டர் அடித்த குடும்பத்தினர்

விசாரணையில் தெரியவந்தது என்ன?

மறைமலைநகரை அடுத்த கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (27), கோகுலாபுரம் பகுதியை சேர்ந்த சந்துரு (26) மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த தில்கேஷ் குமார் (27) ஆகியோர், தங்கள் நண்பரான விக்னேஷை மது அருந்துவதற்காக அழைத்துள்ளனர். இதையடுத்து நான்கு பேரும் சேர்ந்து கோவிந்தாபுரம் ஏரியில் மது அருந்தியுள்ளனர். அப்போது விக்னேஷிற்கும் விசுவிற்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அதுவே கைகலப்பாகி விசுவை விக்னேஷ் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.

அதனால் ஆத்திரமடைந்த விசு வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து விக்னேஷை சரமாரியாக வெட்டியுள்ளார். அதில், சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து விசு, தில்கேஷ் குமார், சந்துரு ஆகிய மூவரும் சேர்ந்து விக்னேஷின் உடலை ஏரியின் அருகிலேயே குழிதோண்டி புதைத்துள்ளனர்.

இதையடுத்து மூவரையும் கைது செய்த மறைமலைநகர் போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police station

இந்நிலையில், இன்று வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் விக்னேஷின் உடலை தோண்டி எடுக்க இருப்பதாக மறைமலைநகர் போலீசார் தெரிவித்தனர். நண்பனை, சக நண்பர்கள் கொலை செய்து புதைத்த சம்பவம் மறைமலைநகர் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.