குற்றம்

இது சினிமா ஸ்டைல்: அழகால் ஆண்களை ஏமாற்றிய இளம் பெண் கைது!

webteam

மேட்ரிமோனியல் மூலம் திருமணம் செய்வதாக கூறி ‌பல ஆண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட இளம் பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜெர்மனியில் பணிபுரிந்து வருகிறார். மேட்ரிமோனியல் மூலம் இவருக்கு சுருதி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர்.  3 மாதங்கள் பழகியுள்ளனர். இந்நிலையில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி ரூ.45 லட்சம் கேட்டுள்ளார் அந்தப் பெண். வருங்கால மனைவி என நம்பி கொடுத்தார் பாலமுருகன். பணம் பெற்ற சுருதி, அதற்கு பிறகு தொடர்பிலிருந்து விலகி விட்டார். தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது லேட்டாகத் தெரிந்திருக்கிறது பாலமுருகனுக்கு.

இதையடுத்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினரிடம் பாலமுருகன் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பி.என்.பாளையத்தை சேர்ந்த சுருதி, தாய் சித்ரா, தந்தை என கூறப்படும் பிரசன்ன வெங்கடேசன் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். 

மேட்ரிமோனியல் மூலம் தகுதி, பொருளாதார சூழ்நிலை ஆகியவை அறிந்து அதற்கேற்ப தங்களின் பக்கத்தில் தகவல்களை மாற்றி ஆண்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்ததும், குடும்பமாக, சுமார் 3 மாதங்கள் பழகிய பின் ஏதாவது புற்றுநோய், மூளைக்கட்டி ஆகிய பெரிய அளவிலான நோயை கூறி ஏமாற்றி பணம் பறித்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு, நாமக்கல், நாகப்பட்டினம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த இளம்பெண் உட்பட இந்த கும்பலின் மீது இதே போல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.