குற்றம்

தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞர்கள் - வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

webteam

கோவை அருகே தனியார் பேருந்து ஓட்டுநரை நான்கு நபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை உக்கடம் பகுதியில் இருந்து வெள்ளமடை வரை எண் 57 கொண்ட தனியார் பேருந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல் வெள்ளமடை பகுதியில் இருந்து உக்கடம் நோக்கி வந்த தனியார் பேருந்தில் கோவில்பாளையம் பகுதியில் நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல் ஏறி உள்ளது. நான்கு பேரும் பேருந்தில் தகராறில் ஈடுபட்டதோடு பேருந்து ஓட்டுனரான அரவிந்த் என்பவரை சரமாரியாக தாக்கினர்.

மேலும் அதில் ஒரு வாலிபர் மீண்டும் வந்து ஓட்டுநர் அரவிந்தன் முகத்தில் உமிழ் நீரை உமிழ்ந்ததோடு பேருந்தை இயக்க விடாமல் தகராறில் ஈடுபடும் காட்சிகள் பேருந்துகள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளன. இதனிடையே தாக்குதலுக்குள்ளான ஓட்டுனர் அரவிந்த் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் நான்கு இளைஞர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பேருந்தில் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதன் காரணமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர்.