குற்றம்

பார்சல் வாங்கிய பருப்பு வடைக்குள் முழு பிளேடு: சப் இன்ஸ்பெக்டர் அதிர்ச்சி!

kaleelrahman

நிலக்கோட்டையில் டீ கடையில் வாங்கிய வடையில் முழு பிளேடு இருந்ததால் சப்-இன்ஸ்பெக்டர் அதிர்ச்சி. உணவு பாதுகாப்பு அலுவலர் டீ கடையில் ஆய்வு மேற்கொண்டார்.


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் கனகராஜ். இவர் நிலக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு உள்ள ராஜா என்பவரின் டீக்கடையில் டீ குடித்துவிட்டு வீட்டுக்கு வடைகளை பார்சலாக வாங்கியுள்ளார்.


பின்னர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது பருப்பு வடையில் முழு பிளேடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் செய்தார். அதைத் தொடர்ந்து நிலக்கோட்டை தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் வடை விற்கப்பட்ட கடைக்குச் சென்று ஆய்வு செய்து கடைக்காரருக்கு நோட்டீஸ் வழங்கினார்.


மேலும் வடை தயாரிக்க பயன்படுத்திய மாவு, பருப்பு, எண்ணெய் உட்பட மூலப்பொருட்களை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடையில் பிளேடு இருந்த சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.