குற்றம்

ஜோதிடம் கற்றுத்தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை: குருஜி கைது!

webteam

ஜோதிடம் கற்றுத் தருவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கங்கமனகுடி சேர்ந்தவர் தினேஷ் குருஜி (38). ஜோதிடர். கன்னட சேனல் ஒன்றில் தினமும் ஜோதிடம் குறித்து பேசி வந்தார். அதோடு ஜோதிடம் கற்றுக் கொடுத்தும் வந்துள்ளார். இதையடுத்து பிரபலமாகி உள்ளார்.  சேனலில் அவர் பேச்சைக் கேட்டு ரசித்த 25 வயது இளம் பெண் ஒருவருக்கு ஜோதிடம் கற்கும் ஆசை வந்தது. பெங்களூர் கங்க மனகுடியில், பைப்லைன் சாலையில் உள்ள அவரது ஜோதிட அலுவலகத்துச் சென்றார். அங்கு தினேஷ் குருஜியை சந்தித்து தனது ஆசையை சொன்னார்.

’கற்றுத்தருகிறேன், ஜோதிடத்தில் டிகிரி வாங்க உதவி செய்கிறேன்’ என்று உறுதி கூறியுள்ளார். இதை நம்பி அவரை அடிக்கடி சந்தித்துள்ளார் இளம் பெண். இதைப் பயன்படுத்திக்கொண்ட குருஜி, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ’இதை யாரிடமும் சொல்லக் கூடாது, சொன்னால் ஜோதிடம் கற்றுக்கொடுக்க மாட்டேன்’ என்று மிரட்டியுள்ளார். அந்த இளம் பெண் சகித்துக் கொண்டு இருந்துள்ளார். தொடர்ந்து இதே போல மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தாராம் குருஜி.

இந்நிலையில் அந்த இளம்பெண்ணின் வீட்டினர் சொத்து ஒன்றை விற்றுள்ளனர். அதன் மூலம் ரூ.50 லட்சம் கிடைத்ததாம். இதைத் தெரிந்துகொண்ட குருஜி, ‘எனக்கு அவசரமாக பணத் தேவை இருக்கிறது. அதை எனக்கு தாருங்கள், விரைவில் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். குருஜியை நம்பிய அந்த குடும்பத்தினர் கொடுத்தனர். ஆனால் சொன்னது போல் திருப்பிக் கொடுக்கவில்லை குருஜி. இதற்கிடையே மேலும் பலமுறை அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இவரைப் போல அவரிடம் ஜோதிடம் கற்க வரும் பலரை அவர் பாலியல் வன்கொடுமை செய்தது அவருக்கு தெரியவந்தது. 

அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் இரண்டு நாட்களுக்கு முன் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, அடித்து மிரட்டினாராம் குருஜி. இதையடுத்து கங்கமனகுடி போலீசில் அந்த இளம் பெண் புகார் கொடுத்தார். போலீசார் தினேஷ் குருஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.