Accused pt desk
குற்றம்

ஆவடி இரட்டை கொலை: செல்போன் மூலம் சிக்கிய வடமாநில இளைஞர் – பின்னணி என்ன?

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

ஆவடி அடுத்த மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர் வீட்டிலேயே சித்த மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்ன குமாரி கணவருக்கு உதவியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் சிகிச்சை பார்ப்பதற்காக வந்த மர்ம நபர், சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்ன குமாரி ஆகியோரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த முத்தாபுதுபேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

death

இந்நிலையில், ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால் தலைமையில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். அப்போது பிரசன்ன குமாரி அருகே செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்த செல்போனை ஆராய்ந்தபோது, அது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்குச் சொந்தமானது என்பதும் இவர், வளசரவாக்கத்தில் தங்கி ஒரு ரசாயன கடையில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது.

இவர், வளசரவாக்கம் பகுதியில் வேலைக்கு சேர்வதற்கு முன்னர் முத்தாபுதுபேட்டை பகுதியில் சில வருடம் வேலை செய்து வந்துள்ளார். இந்த காலகட்டத்தில் சிவன் நாயர் வீட்டை புதுப்பித்தபோது மகேஷ் அறிமுகமாகியுள்ளார். பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரிடம் உடல் வலிக்கு மகேஷ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நாளடைவில் மகேஷின் நடவடிக்கை பிடிக்காத பிரசன்ன குமாரி, இங்கு வருவதை தவிர்க்கும்படி கூறியுள்ளார். இடமாறுதலாகி சென்றதால் வராமல் இருந்த மகேஷ், மீண்டும் மருத்துவ சிகிச்சைக்காக சிவன் நாயரை சந்தித்துள்ளார். இந்த சூழலில் மகேஷின் நடவடிக்கை குறித்து தனது மகனிடமும் கூறி பிரசன்ன குமாரி எச்சரிதுள்ளார். தொடர்ந்து கணவரிடமும் இதை பற்றி தெரிவித்துள்ளார்.

Arrested

சம்பவத்தன்று சிகிச்சைகாக மீண்டும் வந்த மகேஷை, பிரசன்ன குமாரி விரட்டியுள்ளார் அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கோபத்தில் இருந்த மகேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரசன்ன குமாரியை கொலை செய்துள்ளார். அப்போது மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சிவன் நாயரை, கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வளசரவாக்கம் சென்ற போலீசார் மகேஷை கைது செய்து முத்தாபுதுபேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து வாக்குமூலம் பெற்றனர்.

இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தம்பதி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் ஆவடியில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கொலை அரங்கேறிய பகுதியில் தவறவிட்ட செல்போனால் குற்றவாளி அன்றே சிக்கியது குறிப்பிடத்தக்கது.