குற்றம்

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி வங்கி உதவி மேலாளர் செய்த செயல்! இப்போது சிறைவாசம்!

webteam

ஆன்லைன் சூதாட்டம் மீதான அதீத மோகத்தால், வங்கியில் செலுத்தப்படும் கல்வி கடன் காப்பீட்டு தொகையை வங்கி கணக்கில் செலுத்தாமல், ரூ.34.10 லட்சத்தை மோசடி செய்த எஸ்.பி.ஐ பேங்க் உதவி மேலாளரை காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ( ராஸ்மிக் ) கல்விக்கடன் பிரிவில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தவர் விருதுநகரைச் சேர்ந்த யோகேஸ்வர பாண்டியன் (38). இவர் வாடிக்கையாளர்கள் செலுத்தும் கல்வி கடன் காப்பீட்டுத் தொகையை முறையாக வங்கி கணக்கில் செலுத்தாமல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் யோகேஸ்வர பாண்டியன் 137 நபர்கள் செலுத்திய கல்வி கடன் காப்பீட்டு தொகை ரூ.34,10,622/ தொகையை வங்கி கணக்கில் செலுத்தாமல், தன்னுடைய இரு வங்கி கணக்குகளில் செலுத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து, எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் சிவகுமார் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் எஸ்பிஐ வங்கியின் கல்வி கடன் பிரிவு உதவி மேலாளர் யோகேஸ்வர பாண்டியன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் மோசடி செய்த பணத்தை யோகேஸ்வர பாண்டியன் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் போட்டு இழந்தது தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் யோகேஸ்வர பாண்டியனை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.