குற்றம்

அறந்தாங்கி: மாந்தோப்பு குடிசையில் தனியாக வசித்த நபர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை!

webteam

அறந்தாங்கி அருகே வீட்டில் தனியாக இருந்த நபர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவர் மங்களநாடு மாந்தோப்பில் உள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் இன்று காலை 9 மணி ஆகியும் வெளியில் வராததால் ஊர்க்காரர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த நாகுடி போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு விநாயகமூர்த்தி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நேரத்தில் அவரது சித்தப்பாவை கொலை செய்து சிறை தண்டனை அனுபவித்து ஊர் திரும்பி இருக்கிறார். இதன்பிறகு இவருக்கு சொந்தமான தோட்டத்தில் குடிசையில் தனியாக வசித்து வந்துள்ளார். பலிக்கு பலியான சம்பவமாக இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.