குற்றம்

சிறுமியுடன் எடுத்த புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது

kaleelrahman

திருமணத்திற்கு சம்மதிக்காததால் சிறுமியின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்து மிரட்டிய குடியாத்தம் அதிமுக நிர்வாகியை, போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் (27). அதிமுகவின் குடியாத்தம் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் சிறுமியின் வீட்டிற்கு தெரியவே கௌதமிடம் பேசக்கூடாது என்று சிறுமியின் பெற்றோர் எச்சரித்துள்ளனர்.

இதனை அறிந்த கௌதம், சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று சிறுமியை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், சிறுமியின் வீட்டார் சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த கௌதம், சிறுமியுடன்தான் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல் துறையினர் கௌதமை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், ஒழுங்கு நடவடிக்கையாகவும் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.