ஹரிதரன் pt desk
குற்றம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அதிமுக கவுன்சிலர் கைது - கூவம் ஆற்றில் வீசப்பட்ட செல்போன்கள் மீட்பு

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள திமுக வழக்கறிஞர் அருள் என்பவரின் நண்பரான அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் ஹரிதரனை சில நாட்களாக நோட்டமிட்டு நேற்று காலை கைது செய்தனர்.

Armstrong murder case

இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஹரிதரனிடம் நடத்திய விசாரணையில், இவர் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. ஹரிதரன், திருவள்ளூர் மாவட்ட கடம்பத்தூர் ஊராட்சி மூன்றாவது வார்டு அதிமுக கவுன்சிலர் என்பதும் திருவள்ளூர் மாவட்ட அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் என்பதும் தெரியவந்தது.

கொலை நடந்த அன்று இரவு சென்னையில் இருந்த ஹரிதரனை சந்தித்த அருள், கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்களை மொத்தமாக வாங்கி அதனை ஹரிதரனிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிச் சென்ற ஹரிதரண் திருவள்ளூர் அருகில் உள்ள வெங்கத்தூர் ஒண்டிகுப்பம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் தூக்கி எறிந்ததும் தெரியவந்தது.

கூவம்

இதனையடுத்து ஸ்கூபா டைவிங் வீரர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு கூவம் ஆற்றில் தூக்கி எறிந்த செல்போன்களை மீட்டனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அதிமுக கவுன்சிலர் ஹரிதரனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.