குற்றம்

மாற்றுத் திறனாளியின் மனைவிக்கு பாலியல் தொல்லை: அதிமுக நகர செயலாளர் கைது

kaleelrahman

பெரம்பலூர் அருகே சுயநினைவில்லாத மாற்றுத் திறனாளியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதிமுக நகர செயலாளர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் அருகே பூலாம்பாடி அதிமுக நகர செயலாளராக இருப்பவர் வினோத் (48). இவர் மீது ஏற்கெனவே அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று ஏமாற்றி மோசடி செய்ததாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர் மீது பூலாம்பாடியைச் சேர்ந்த சுயநினைவில்லாத மாற்றுத் திறனாளியின் மனைவி, அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் பூலாம்பாடி அதிமுக நகர செயலாளர் வினோத் தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், கத்தியை காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்க சொன்னதாகவும் சம்மந்தப்பட்ட பெண் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் நீ நடத்தும் கேஸ் கம்பெனியோடு உன்னையும் கொளுத்தி விடுவேன் என அதிமுக நகர செயலாளர் வினோத் அடிக்கடி மிரட்டிவந்ததாகவும் அந்த பெண் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பூலாம்பாடி அதிமுக நகர செயலாளர் வினோத்தை கைது செய்துள்ளனர். அவர் மீது கொலைமுயற்சி,அத்துமீறி வழிமறித்து மிரட்டுதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள பூலாம்பாடி அதிமுக நகர செயலாளர் வினோத்தை சிறையில் அடைப்பதற்கான நடைமுறைகளை போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

பாலியல் புகாரில் பூலாம்பாடி அதிமுக நகர செயலாளர் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.