நண்பர்களுடன் சேர்ந்த ஏமாற்றிய கல்லூரி மாணவி PT
குற்றம்

'தகாத உறவுக்கு அழைத்து சென்று முதியவரிடம் பணம் பறித்த இளம்பெண்' - அதிர்ச்சி பின்ணணி?

மளிகைக்கடை உரிமையாளரிடம் ஆசை வார்த்தைகள் கூறி நண்பர்களுடன் சேர்ந்து பணம் பறித்துச் சென்ற கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

PT WEB

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கூடப்பாகம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (50). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த 12ஆம் தேதி அவருடைய கடைக்கு வந்த இளம் பெண் ஒருவர் தன் பெயர் வனிதா (19) என்றும், புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும், பெற்றோர்கள் இல்லாததால் உறவினர் வீட்டில் வசித்து வருவதாகவும் தனக்கு வாடகைக்கு ஒரு வீடு வேண்டும் என கேட்டுள்ளார்.

பின்னர் கருணாகரன் அவருடைய செல்போன் நம்பரைக் கொடுத்து இரண்டு நாட்கள் கழித்து தன்னை வந்து பார்க்கும் படி கூறி அனுப்பி வைத்துள்ளார். அந்த செல்போன் நம்பருக்குத் தொடர்பு கொண்ட இளம்பெண் அன்பாகப் பேசத் தொடங்கியுள்ளார். அப்போது ஒரு நாள் நாம் தனியாக வெளியே செல்லலாம் எனக் கூறியுள்ளார்.

பிரகாஷ்

இதனையடுத்து ஆர்வமான கருணாகரன் அன்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் வனிதாவை ஏற்றிக் கொண்டு வில்லியனூர் அருகே உள்ள கனுவாபேட்டை பகுதிக்குச் சென்று தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த 3 இளைஞர்கள் அரை நிர்வாணமாக இருந்த கருணாகரனைப் புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் 2 லட்சம் பணம் தரவேண்டும் இல்லையென்றால் நிர்வாண புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கருணாகரன் தன்னிடம் இருந்த ரூ. 50 ஆயிரம் மற்றும் தனது நண்பரைத் தொடர்பு கொண்டு 75 ஆயிரம் பணத்தை ஜி-பே மூலமாக அந்த நபர்களுக்குக் கொடுத்துள்ளார்.

ராமு

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக வில்லியனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கருணாகரன் பணம் அனுப்பிய ஜி-பே நம்பரை வைத்து விசாரணை நடத்தியதில், கனுவாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (21), ராமு (22) எனத் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராமு மனைவியின் தோழியான வனிதா மூலம் கருணாகரனிடம் பணம் பறிக்க முயற்சி செய்ததும், இவர்களுடன் அருண் என்பவரையும் சேர்த்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பிரகாஷ,ராமு, இருவரையும் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய வனிதா, அருண், ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.