குற்றம்

தகாத உறவுக்காகக் கணவரை விட்டுச் சென்ற மனைவி - கொரோனா பீதியில் திரும்பிய போது வெட்டிக் கொலை

webteam
கணவரை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் தனிக்குடித்தனம் நடத்திய பெண், பத்து ஆண்டுகளுக்குப் பின் உறவினர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி செல்வி. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருடன் இல்லறத்தை மீறி தகாத பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் இரு வீட்டாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே  முருகன் மற்றும் செல்வியும் ஊரை விட்டு வெளியேறி திருப்பூரில் பத்து ஆண்டுகளாக வசித்து வந்ததாகத் தெரிகிறது.  தற்போது கொரோனா பாதிப்பு எதிரொலியாகச் சொந்த ஊருக்கு வந்த இந்த இருவரையும் அவரது உறவினர்களான கதிரேசன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தங்களின் கூட்டாளிகளுடன் சென்று அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இதில் செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் முருகன் படுகாயங்களுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பத்தை அறிந்து விரைந்து வந்த சிந்து பட்டி போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கதிரேசன், அருண்குமார் மற்றும் அவர்களின் கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.