குற்றம்

சென்னை : வீடு புகுந்து ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

webteam

வீடு புகுந்து ஆட்டோ ஓட்டுனரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சத்யராஜ்(38). இவர் டிரஸ்ட்புரம் 9வது தெருவில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆட்டோ ஸ்டாண்டில் 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

கடந்த 28ஆம் தேதி அபிஷேக் என்பவர் குடிபோதையில் வந்து ஆட்டோ வேண்டும் என அனைவரிடமும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சத்யராஜ் அபிஷேக்கை  திட்டியதாக தெரிகிறது. மேலும் ஆட்டோ ஓட்டுனரான ஆரி மற்றும் குள்ளு ஆகியோர் அபிஷேக்கை இரும்பு கம்பியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் காயம் ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.

இந்த நிலையில் அபிஷேக்கின் நண்பர்களான ஐயப்பன், மணிகண்டன் உட்பட 6 பேர் ஆட்டோ ஸ்டாண்டிற்கு நேற்று சென்றுள்ளனர். அப்போது அங்கு யாரும் இல்லாததால் கோடம்பாக்கத்தில் உள்ள சத்யாராஜின் வீட்டிற்கு சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக சத்யாராஜை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சத்யாராஜை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிசைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் 7பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.