Accused pt desk
குற்றம்

கடன் தொல்லையால் பறிபோன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் உயிர்! வட்டிக்கு பணம் கொடுத்த 6 பேர் கைது

webteam

செய்தியாளர்: A. மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரை சேர்ந்தவர் லிங்கம் (45). இவரது மனைவி பழனியம்மாள் (47). இருவரும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு ஆனந்தவள்ளி (27) என்ற மகளும், ஆதித்யா (14) என்ற மகனும் இருந்தனர். ஆனந்தவள்ளிக்கு திருமணமாகி சஷ்டிகா என்ற 3 மாத குழந்தை உள்ளது. ஆதித்யா சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

Police station

இந்நிலையில் கடன் பிரச்னை காரணமாக கடந்த 22-ம் தேதி இரவு ஆதித்யா, ஆனந்தவள்ளி, சஷ்டிகா ஆகியோருக்கு விஷம் கொடுத்து விட்டு லிங்கம், பழனியம்மாள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். போலீஸ் விசாரணையில், கடன் பிரச்னை காரணமாக லிங்கம் கடந்த இரு மாதங்களுக்கு முன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கடன் வாங்கிய சிலரது பெயரை குறிப்பிட்டு, அவர்கள் அளித்த மிரட்டலால் தான் தற்கொலைக்கு முயனறதாக் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து நேற்று லிங்கத்திற்கு கடன் கொடுத்தவர்களில் 6 பேரை திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு வரவழைத்து டி.எஸ்.பி சுப்பையா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அருண்குமார் (43), திருத்தங்கலைச் சேர்ந்த கிருஷ்ணன் (42), கொங்கலாபுரத்தைச் சேர்ந்த வி.முருகன் (69), எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த எஸ்.முருகன் (53), மணிவண்ணன் (43), சித்துராஜபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் (44) ஆகிய 6 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், கந்துவட்டி தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.