Accused pt desk
குற்றம்

பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் திமுக கொடி கட்டிய காரில் வந்து அராஜகம் - 4 பேர் கைது

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னை ஈ.சி.ஆர் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, திமுக கொடி கட்டிய கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கத்தியை தரையில் தேய்த்தபடி சுமார் 30க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக கானாத்தூர் போலீசார், வீடியோ காட்சிகளை வைத்து அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கைதான எழில்

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 5-ம் தேதி எழில் (எ) எழிலரசன் என்பவரின் பிறந்தநாளை அவரது நண்பர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலையில் கொண்டாடிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அன்றே சைதாப்பேட்டை பகுதியிலும் காரில் சாகசங்கள் செய்து பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், சைதாப்பேட்டை போலீசார் வீடியோவை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சைதாப்பேட்டை காரணி தோட்டம் பகுதியைச் சேர்ந்த எழில் (எ) எழிலரசன் தனது பிறந்தநாளை நண்பர்களோடு சேர்ந்து கஞ்சா போதையில் அட்டகாசம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து எழில் (எ) எழிலரசன் (29), மற்றும் அவரது நண்பர்களான சைதாப்பேட்டை வேணுகோபால் தெருவை சேர்ந்த வினோத் (19), ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (26), சைதாபேட்டையைச் சேர்ந்த சரவணன் (19) ஆகிய 4 நபர்களை கைது செய்துள்ளனர்.

Car

இவர்களில் எழிலரசனை போலீசார் பிடிக்க முற்பட்டபோது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற எழிலரசன், மதில் சுவரை ஏறிக் குதித்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது கீழே விழுந்ததில் அவரது கை எலும்பு முறிந்தது. கைது செய்யப்பட்ட மற்ற நபர்களிடம் சைதாபேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.