Accused pt desk
குற்றம்

பணம் நிரப்பும் பாஸ்வேர்ட் எண்ணை பயன்படுத்தி ஏடிஎம்-ல் கொள்ளை – ஆந்திராவை சேர்ந்த 3 பேர் கைது

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

பெங்களூரு விவேக் நகர் விக்டோரியா லே - அவுட்டில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி இரவு, ஏ.டி.எம்-ல் பணம் நிரப்பும், பாஸ்வேர்ட் எண்ணை பயன்படுத்தி மர்ம நபர்கள் 20 லட்சம் ரூபாயை திருடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விவேக் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

CCTV Footage

விசாரணையில், ஏ.டி.எம் களில் பணம் நிரப்பும் நிறுவனத்தின் ஊழியர்கள் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. அந்த ஏ.டி.எம்-ல் செக்யூரிட்டி வேல்யூ இந்தியா என்ற நிறுவனத்தினர் பணம் நிரப்பினர். இதனால் அங்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பணம் நிரப்பும் பொறுப்பு, ஆந்திராவின் அனந்தபூரின் கலு வெங்கடேஷ், (35) என்பவர் கட்டுப்பாட்டில் இருப்பதும், அவர் விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்ததும் தெரியவந்தது.

அதையடுத்து நேற்று முன்தினம் அனந்தபூர் சென்ற விவேக் நகர் போலீசார், கலு வெங்கடேஷை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், அனந்தபூரின் முரளி மோகன் (27), பொட்டலு சாஹி தேஜா (28), ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Police station

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஏடிஎம் இயந்திர பாஸ்வேர்ட் எண்களை பயன்படுத்தி பணம் திருடியது தெரிந்தது. முரளி மோகனுக்கு உடந்தையாக இருந்ததால், பொட்டலு சாஹி தேஜாவும் சிக்கியுள்ளார்.