Accused pt desk
குற்றம்

கோவை: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.22 லட்சம் மோசடி – பெண் உட்பட 3 பேர் கைது

webteam

செய்தியாளர்: பிரவீண்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் நாகராஜ். கணேசன் பெயிண்ட் கடையை நடத்தி வருகிறார். அந்தக் கடைக்கு வந்த கரூரை சேர்ந்த சாய் ஸ்ரீ என்ற பெண்ணும், அவரது கணவர் கிருஷ்ணகுமார் மற்றும் அவரது மாமா பெருமாள்சாமி ஆகியோரும் நாகராஜின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும் அரசு வேலையில் சேர்வதற்கு அதிகாரிகளிடம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Arrested

அதனை நம்பிய நாகராஜ், அவர்களிடம் ரூ.1 லட்சத்தி 60 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து நாகராஜ் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படைகள் அமைத்து சாய் ஸ்ரீ, கிருஷ்ணகுமார் மற்றும் பெருமாள்சாமி ஆகியோரை கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் விசாரணை செய்ததில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கோவை மாவட்டத்தில் மேலும் 9 நபர்களிடம் அவர்கள் மொத்தம் ரூ.22 லட்சத்தி 55 ஆயிரம் ரூபாயை ஏமாற்றியது தெரியவந்தது. இது மட்டுமன்றி பிற மாவட்டங்களிலும் அவர்கள் பலரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து 3 நபர்களையும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.