accused pt desk
குற்றம்

அரியலூர்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.36 லட்சம் மோசடி – தலைமறைவாக இருந்த கணவன் மனைவி கைது

webteam

கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் குமிளங்காட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (43). இவரது மனைவி வழி உறவினர்களான அரியலூர் மாவட்டம் விழபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (42) மற்றும் அவரது மனைவி மதியழகி (35), சில ஆண்டுகளுக்கு முன் பிரபாகரனுக்கு நெருக்கமாகியுள்ளனர். மதியழகி தன்னை அரியலூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் வேலை பார்ப்பதாகவும், பிரகாஷ் தான் அரியலூர் அரசு சிமெண்ட் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறி பிரபாகரனிடம் தங்களை அறிமுகப்படுத்தியதாக தெரிகிறது.

accused

இவர்கள் பிரபாகரனிடம், “நீங்கள் படித்துவிட்டு ஏன் சும்மா இருக்கிறீர்கள். பணம் கொடுத்தால் உங்களுக்கு BSNL நிறுவனத்தில் வேலை வாங்கித் தருகிறோம்” எனக்கூறி, அவர்களிடம் வங்கி பரிவர்த்தனை மூலமாக 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும், ரொக்கமாக 4 லட்சமும் பெற்றுள்ளனர். அதிலும் பிரகாஷ், “உங்கள் ஊரில் யாராவது படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்தால் அழைத்து வாருங்கள். அவர்களுக்கும் வேலை வாங்கித் தருகிறேன்” என்று கூறியுள்ளார். இதனை நம்பி அதே ஊரைச் சேர்ந்த பிரேம்குமார், முருகன், ரகுபதி, சண்முக சுந்தரம், கவிமணி, கதிரவன் மற்றும் இருகையூரைச் சேர்ந்த குருதேவன் ஆகியோரை பிரகாஷிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் பிரபாகரன்.

இவர்களிடமெல்லாம் அரசு சிமெண்ட் நிறுவனம், சேலம் ஆவின் நிறுவனம், ஆட்சியர் அலுவலகம் மற்றும் அஞ்சல் துறை போன்ற இடங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 27 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர் அத்தம்பதி. பின்னர் பிரபாகரனுக்கும் கவிமணி என்பவருக்கும் அஞ்சல்துறை பணி நியமன ஆணையை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து அஞ்சல் துறையில் விசாரித்தபோது பிரபாகரன் - கவிமணியின் பணி நியமன ஆணை போலியானது என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரபாகரன் போலீஸை அனுகியுள்ளார். அவர் கூறுகையில், “இது தொடர்பாக பிரகாஷிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். எனவே எங்களுக்கு வேலை வாங்கிக் கொடு, இல்லையென்றால் எங்கள் பணத்தை திருப்பி கொடு என்று கேட்டோம்.

arrested

அப்போது பிரகாஷ், உங்களால் எங்களை எதுவும் செய்ய முடியாது முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும், இது பற்றி வெளியில் ஏதாவது புகார் கொடுத்தால் உங்களை வெட்டி காலி செய்து விடுவேன் என்றும் மிரட்டினார்” என்றுள்ளார்.

இது குறித்து பிரபாகரன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் பிரகாஷ் மற்றும் மதியழகி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், பிரகாஷை ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகேயும், அவரது மனைவி மதியழகியை அரியலூர் ராஜீவ்நகர் பேருந்து நிறுத்தத்தில் வைத்தும் தற்போது கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து இவர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள், சுமார் 60 கிராம் தங்க நகைகள், 56 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மூன்று ஏடிஎம் கார்டுகள், மற்றும் போலி பணி நியமன ஆணை கடிதம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.