குற்றம்

‘மாணவிக்கு வயிற்று வலி’ மருத்துவ சோதனையில் மனமுடைந்த பெற்றோர்!

webteam

அனகாபுத்தூரில் பள்ளி மாணவியை வயிற்று வலிக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, கர்ப்பமாகியிருப்பது தெரியவந்தது.

சென்னை, குன்றத்தூரை அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் துர்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜராஜன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் இருவரும் அனகாபுத்தூர் அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். பள்ளியில் படிக்கும் போது இருவரும் காதலித்துள்ளனர். இருவருக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. இவர்களின் காதல் தொடர்பாக இரு வீட்டாருக்கும் எந்த தகவலும் தெரியாது.

பள்ளி விடுமுறையில் மாணவி வீட்டில் இருந்துள்ளார். அவ்வப்போது மாணவி வயிறு வலிக்கின்றது என்று கூறி வந்துள்ளார். இதனால் தனது மகளை அழைத்துக்கொண்டு பெற்றோர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். மாணவியை மருத்துவ சோதனை செய்ததில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் தெரிய வந்தது. சோதனையில் அவர் 6 மாதம் கர்ப்பம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தகவலை கேட்டதும், மாணவியின் பெற்றோர் மனமுடைந்து உறைந்து போய்விட்டார்கள். 

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம், தாம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தது. தகவலறிந்து வந்த காவலர்கள் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அந்த மாணவரை தேடிச்சென்று கைது செய்தனர். உடனடியாக அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலர்கள், நீதிமன்ற உத்தரவின் படி மாணவரை செங்கல்பட்டு கூர்நோக்கு காப்பகத்தில் அடைத்துள்ளனர்.