குற்றம்

திருச்சி: வீட்டு ஜன்னல் கம்பியை உடைத்து 10 லட்சம் கொள்ளை

Sinekadhara

லாக் டவுனில் திருச்சி காஜா தோப்பு பகுதியில் வீட்டு ஜன்னல் கம்பியை உடைத்து 10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

திருச்சி காஜா தோப்பு பகுதியில் வசிப்பவர் மூத்தாட்டி நஜீமா பேகம் (வயது 75). கணவர் இறந்த நிலையில் வீட்டில் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். மேலும் வீடுகளை வாடகைக்கு விட்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவரது மகள் திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியில் வசிக்கிறார். அவரை பார்ப்பதற்கு கடந்த 25ஆம் தேதி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவரது வீட்டுக்கு அருகிலிருக்கும் உறவினர்கள் நேற்று இவரது வீட்டு பக்கவாட்டில் இருந்த ஜன்னல் உடைந்து இருப்பதை கண்டு நஜீமா பேகத்திற்கு தகவல் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேரில் வந்து பார்த்த நஜீமா வீட்டின் ஜன்னல்புறம் உடைக்கப்பட்டு இரும்பு பீரோவில் இருந்த ரொக்கம் 10 லட்சம் திருட்டு போய் உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து, தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்துகொண்ட தில்லைநகர் போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை கொண்டு விசாரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

திருச்சியில் அதிகம் ஆள் நடமாட்டமுள்ள பகுதியான காஜா தோப்பு பகுதியில் ஜன்னலை உடைத்து 10 லட்சம் ரொக்கம் கொள்ளைபோனது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.