கொரோனா வைரஸ்

ஜிப்மர் கொரோனா வார்டை 1000 படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயர்த்துக – ரவிக்குமார் எம்.பி

ஜிப்மர் கொரோனா வார்டை 1000 படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயர்த்துக – ரவிக்குமார் எம்.பி

Veeramani

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டை குறைந்தபட்சம் 1000 படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது “ நமது நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஒன்றாக ஜிப்மர் மருத்துவமனை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையின் இயக்குநர் அளித்த தகவலின்படி அங்கே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவென 250 படுக்கைகள் கொண்ட வார்டு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜிப்மர் மருத்துவமனை விழுப்புரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து வருகிறது. புதுச்சேரியில் இப்போது ஒவ்வொரு நாளும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகின்ற காரணத்தால் போதுமான அளவு சிகிச்சை அளிக்க முடியாமல் ஜிப்மர் மருத்துவமனை திணறி வருகிறது. எனவே உடனடியாக ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டை ஆயிரம் படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அங்கு கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை நிலையமும் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 1000 பரிசோதனைகள் செய்யும் விதமாக  அதைத் தரம் உயர்த்தித் தரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” குறிப்பிட்டிருக்கிறார்.