கொரோனா வைரஸ்

தமிழ்நாட்டில் நாளை முதல் அமலுக்கு வரும் புதிய தளர்வுகள் - முழுமையான விபரங்கள்

Veeramani

தமிழ்நாட்டில் நாளையில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் கூடுதல் தளர்வுகளும் அமலுக்கு வருகின்றன.

கொரோனா பரவல் கணிசமாக குறைந்ததை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திங்கள்கிழமையில் இருந்து அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 8 ஆம் வகுப்புகள் வரை சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்படவும், தனித்து இயங்கும் மதுக் கூடங்களும் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவை தவிர பிற மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையே சாதாரண மற்றும் குளிர்சாதன பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் 100 சதவீத இருக்கைகளில் பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேவையான பணியாளர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகள் நடத்தவும், அரசு பயிற்சி நிலையங்கள் 100 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும், சிகிச்சைக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கான தடை தொடரும் எனவும் அரசு அறிவித்துள்ளது.