கொரோனா வைரஸ்

எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை? - மருத்துவக்குழு ஆலோசனை

webteam

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 5-ஆம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையிலுள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமானதால் அவர் மீண்டு வரவேண்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் சத்தியராஜ் உட்பட பலரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து அவர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்து கொண்டிருப்பதாக  அவரது மகன் எஸ்.பி.சரண் செய்திகளை வெளியிட்டு வந்தார். அந்த வகையில் நேற்று பேசிய எஸ்.பி.சரண் தந்தைக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளதாகக் கூறினார். தொடர்ந்து வெண்டிலேட்டர் எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனாத் தொற்றால் பாலசுப்ரமணியத்தின் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக தமிழக சுகாதாரத்துறையின் உறுப்பு மாற்று பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு, எம்ஜிஎம் மருத்துவக்குழு வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தது குறிப்பிடத்தக்கது.