கொரோனா வைரஸ்

கர்நாடகாவில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் பார்கள், பப்கள் இயங்க அனுமதி

Sinekadhara

மதுபான விடுதிகள், இரவு கேளிக்கை விடுதிகள், உணவு விடுதிகள் மற்றும் கிளப்கள் இன்று முதல் 50% இருக்கைகளுடன் செயல்பட கர்நாடக அரசு அனுமதி கொடுத்துள்ளது.

அசாம், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற தளர்வுகள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால் கலால் ஆணையரின் உத்தரவுப்படி 50% இருக்கைகளுடன் இயங்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் உள்துறை அமைச்சகம் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளின்படி, கொரோனா வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது அரசாங்க வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

கர்நாடக அரசு மே மாதத்தில் எம்ஆர்பி விற்பனை நிலையங்களில் மதுபான விற்பனையை அனுமதித்திருந்தது. இதனால் ஏற்கனவே உள்ள ஸ்டாக்குகளை விற்றுத் தீர்க்க வழிவகை செய்தது. ஆனால் உள்ளே அமர அனுமதிக்கப்படவில்லை.

அரசாங்கத்தின் இந்த முடிவை பல நிறுவனங்கள் வரவேற்றுள்ளபோதிலும், தொற்றுநோய் காரணமாக வியாபாரம் பாதிக்கப்படலாம் என கூறுகின்றனர். இதுகுறித்து மதுபான விடுதி மேலாளர் ஒருவர், மறுபடியும் விற்பனையைத் தொடங்க சில நாட்கள் ஆகும் என்றும், தேவையான பொருட்களுடன் தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகள் பற்றி பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நகரத்தின் முக்கிய மார்க்கெட்டுகளான கே.ஆர் மார்க்கெட் மற்றும் கலாசிபால்யா மார்க்கெட்டும் தொற்றுநோய் காரணமாக மூடப்பட்டிருந்தது. அவற்றையும் இன்றுமுதல் தொடங்க அனுமதிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், கொரோனா பரவலைத் தடுக்க விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை கவனிக்கவும் அதிகாரிகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.