சினிமா

பத்மாவதியை ரிலீஸ் செய்ய விடமாட்டோம்: உ.பி. துணை முதல்வர்

rajakannan

பத்மாவதி படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் படத்தை உத்தரப் பிரதேசத்தில் திரையிட விடமாட்டோம் என்று அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா கூறியுள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’ இந்தி திரைப்படம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. இதில் ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. ராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் படத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 17-ம் தேதி வழக்கு தொடரப்பட்டது. சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதல் படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டுமென வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். கடும் எதிர்ப்பை அடுத்து, பத்மாவதி திரைப்படம் ரிலீஸ், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இன்று அறிவித்தார்.

இந்நிலையில், பத்மாவதி படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் படத்தை உத்தரப் பிரதேசத்தில் திரையிட விடமாட்டோம் என்று அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர். முகலாயர்களால் சூழப்பட்ட போதும் தனக்கு தீ வைத்து அழித்துக் கொண்டு தன்னை வரலாற்றில் இடம்பெறச் செய்தவர் ராணி பத்மினி” என்று கூறினார். 

முன்னதாக, ‘பத்மாவதி’ திரைப்படத்தில் மாற்றங்கள் செய்யும் வரை வெளியிடக் கூடாது என ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.