சினிமா

பொன் ஒன்று கண்டேனில் இருந்து விலகுகிறேன்: விஷ்ணு விஷால்

webteam

’பொன் ஒன்று கண்டேன்’ படத்தில் இருந்து  நடிகர் விஷ்ணு விஷால் விலகி உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் விஷ்ணு விஷால். இப்போது அவரது கையில் ‘ராட்சசன்’, ‘சிக்குவார்பட்டி’ எனப் பல படங்கள் உள்ளன. ‘முண்டாசுப்பட்டி’க்கு பிறகு கவனிக்கத்தக்க நடிகராக வலம் வரும் விஷ்ணு ‘வேலையினு வந்துட்டா வெள்ளக்காரன்’ மூலம் பெரிய வெற்றியை அடைந்தார்.

இந்நிலையில் கவுதம் மேனன் தயாரிக்க இருந்த ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்தில் அவர் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இது தெலுங்கில் வெளியான விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா நடிப்பில் வெளி வந்த ‘பெல்லு சூப்புலு’ படத்தின் ரீமேக் என்று தகவல் வெளியானது. தெலுங்கில் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படத்தின் ரீமேக் என்பதால் இதற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. பட அறிவிப்பு வெளிவந்த பிறகும் படப்பிடிப்பு தொடங்காத நிலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஷ்ணு. 

இது சம்பந்தமாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “நிறைய கேள்விகளை எதிர்கொள்கிறேன். பொன் ஒன்று கண்டேன் படத்தில் என்னால் இணைந்து பணியாற்ற முடியவில்லை. படத்தின் வேலைகள் மிகத் தாமதமாகிக் கொண்டிருப்பதால் என்னால் கால் ஷீட் கொடுக்க முடியவில்லை. ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு. விரைவில் இயக்குநர் எழில் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. அந்தப் படத்திற்கான தலைப்பு விரைவில் வெளியாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.