சினிமா

“ரெய்டு நடந்தது என் வீடே இல்லை” - விஜய்சேதுபதி மறுப்பு

webteam

தனது வீட்டில் ரெய்டு நடந்ததை பற்றி விளக்கம் அளித்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.

சென்னையில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள ‘96’ படத்திற்கான சிறப்பு சந்திப்பு நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்ட இந்த இருவரும் பல கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அதற்கு அவர்கள் மிகத் தெளிவாக விளக்கம் அளித்தனர். நடிகை த்ரிஷா தனது ‘96’ படத்திற்கு மிக அதிகமான எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதைப்பற்றி கொஞ்சம் அச்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் பேசும் போது,“கொஞ்சம் பதட்டமா இருக்கு. உண்மையில் இந்தப் படத்தின் டீசர் வந்த பிறகு பலரும், ‘ப்ளாக்பாஸ்டர்..செம ஹிட் ஆகிடும்’னு சொல்றாங்க. ஒருபடம் வெளிவரத்துக்கு முன்னாடியே இப்படி சொல்வதால் லேசா பதட்டம் உருவாகியிருக்கு. நான் இயக்குநருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். 

ஏன்னா, அவர் ஒரு அழகான லவ் ஸ்டோரியை ஹீரோயினுக்காக எழுதியிருக்கார். இதை போல ஒரு கேரக்டர் பண்றது கஷ்டம். என் வாழ்கையில் இந்த வகையான பாத்திரத்தில் நடித்ததில்லை. விஜய்சேதுபதி நடிப்பை பற்றி சொல்ல தேவையில்ல. யாருமே நடிச்சோம்னு சொல்லாம இயற்கையா அந்தக் கதாப்பாத்திரமா இருந்திருக்கோம். நாங்க யாருமே போட்டி போட்டு நடிக்கல” என்றார் த்ரிஷா.

அவரிடம் சினிமாவில் விஜய்சேதுபதியைவிட நீங்கதான் சீனியர்.. அவருடன் நடிக்கும் போது ஏதாவது பயம் இருந்ததா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு த்ரிஷா, “இந்தப் படத்தோட செட்டுக்குள்ள போன போது யாருமே பிரபலமா போகல. ஒரு சாதரணமான ஆளாதான் போனோம். நாம த்ரிஷா, இவர் விஜய்சேதுபதினு பார்த்து பார்த்து நடிக்கல” என்றார்.

அவரை அடுத்து பேசிய விஜய்சேதுபதியிடம் அவர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்ததாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அது ரெய்டு இல்ல. சர்வே. என் மூஞ்சி அதிகமான படங்களில் வருகிறது. அதனால நான் சரியா கணக்கு எழுதி இருக்கேனா? கிரெடிட், டெபிட் கணக்கு எல்லாம் ஒழுங்கா எழுதியிருக்கேனா? எனப் பார்க்க வந்தாங்க. இன்கம்டாக்ஸ் டிப்பார்ட்மெண்ட்ல ‘சர்வே’னு ஒரு துறை இருக்கு. அது எனக்கே இப்பதான் தெரியும். நான் மூணு வருஷமா அட்வான்ஸ் டாக்ஸ்தான் கட்டிக் கொண்டு இருக்கேன்.

ஆனா என்னோட ஆடிட்டர் ரிட்டர்ன் ஃபைல் பண்ணல. அவர் திடீர்னு போய்  ஃபைல் பண்ணி இருக்கார். அதனால எகிறிகுதிச்சு வந்து  கணக்கு சரியா இருக்கானு பார்த்திருக்காங்க” என்று பதில் அளித்தார். அவரிடம் ரெய்டு என்றுதானே கேள்விப்பட்டோம் என்றதற்கு, அவர் “எப்போது தவறாக செய்தியை பரப்பினால்தான் உடனே ரீச் ஆகும். அது எனக்கு பப்ளிசிட்டிதானே? காசு கொடுத்தால் கூட அப்படியொரு பப்ளிசிட்டி கிடைக்காது எனக்கு. கண்டதை பேசினாதான் பப்ளிசிட்டி கிடைக்கும். அப்படியொரு ட்ரெண்ட் நம்ம ஊர்ல இருக்கு. பொதுக்கூட்டத்துல கத்தி பேசிட்டு அத நான் பேசல. என் அட்மின் பேசிட்டாரு. எனக்கு பதிலா மிமிக்ரி பண்ணிட்டாங்கனு சொல்றாங்க.”என்றார் அவர். மேலும் ரெய்டு நடந்தது என் வீடு இல்லை. என் வீடு போல செட்டு போட்டு செக் பண்ணியிருக்காங்க. அது என் வீடு இல்லை என்றும் மறுத்தார்.