சினிமா

சிம்பு இசையில் பாடிய உன்னிகிருஷ்ணன் மகன்

webteam

பிரபல பின்னணிப் பாடகரான உன்னிகிருஷ்ணன், மகளை தொடர்ந்து தனது மகனையும் தமிழ் திரையுலகில் பாடகராக களமிறக்கியுள்ளார். சிம்பு இசையமைப்பில் அவர் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த பாடகரான உன்னிகிருஷ்ணன், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அவருடைய மகளான உத்ரா உன்னிகிருஷ்ணன், சைவம் படத்தில், அழகே… அழகே… என தொடங்கும் பாடலை பாடி அசத்தி இருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அந்த பாடலுக்காக உத்ராவுக்கு தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில், நடிகர் சிம்பு இசையமைப்பில், உன்னிகிருஷ்ணனின் மகனான வாசுதேவ் கிருஷ்ணன், ‘சக்கபோடு போடு ராஜா’ படத்திற்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார். சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், லியோன் ஜேம்ஸ், டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் ஆகியோரும் பாடியிருக்கின்றனர். வாசுதேவ் கிருஷ்ணன் (20), இசைதுறையில் மட்டுமல்லாது, கிரிக்கெட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.