சினிமா

"வெளியே வந்தால் சாட்சிகளை கலைக்க கூடும்"-திவ்யா கோரிக்கை ஏற்பு.. அர்ணவின் ஜாமீன் மனு ரத்து

"வெளியே வந்தால் சாட்சிகளை கலைக்க கூடும்"-திவ்யா கோரிக்கை ஏற்பு.. அர்ணவின் ஜாமீன் மனு ரத்து

webteam

கைதாகியுள்ள சின்னத்திரை நடிகர் அர்ணவ், வெளியே வந்தால் சாட்சிகளை கலைக்க கூடும் என்பதால் ஜாமீன் கொடுக்க கூடாது என திவ்யா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகர் அர்ணவ் தன்னுடன் நடித்த திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கர்ப்பிணியாக உள்ள சின்னத்திரை நடிகை திவ்யாவை, அர்ணவ் அடித்து துன்புறுத்தியதாக அளித்தப் புகாரின் பேரில் அவர் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்றுப் பிரிவுகளின் கீழ் போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். பின்னர் அர்ணவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அர்ணவிற்கு ஜாமீன் வேண்டுமென அவரது வக்கீல்கள் தரப்பில் பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

பூந்தமல்லி நீதிமன்ற மாஜிஸ்திரேட் இல்லாததால் ஜாமீன் மனுவை, அம்பத்தூர் மாஜிஸ்திரேட் இன்று விசாரித்தார். இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தநிலையில் திவ்யா தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவர் கருவை கலைத்து விட்டு தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும், அவரை தான் பார்த்து கொள்ள வேண்டும் என அர்ணவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அர்ணவிற்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக தற்போது தகவல்கள் வந்திருப்பதால் அவர் வெளியே வந்தால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என்ற காரணத்தால் ஜாமீன் கொடுக்கக் கூடாது என திவ்யா தரப்பில் இருந்து மனு அளிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு மனுவையும் விசாரித்த மாஜிஸ்திரேட் அர்ணவிற்கு ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார்.