சினிமா

தரம் தாழ்ந்த விமர்சனத்திற்கு எதிர்வினையாற்ற வேண்டாம்: ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்

webteam

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்து கொள்ள வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது திரைக்கு வந்து ஓடிகொண்டிருக்கும் படம்  ‘தானா சேர்ந்த கூட்டம்’. இதனைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாபச்சனுடன் இணைந்து ஒரு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் சன் மியூசிக் சேனலில் சினிமா குறித்த செய்திகளின் போது பெண் தொகுப்பாளினிகள் இருவர் நடிகர் சூர்யாவின் பெயரை குறிப்பிடாமல் அவரது உயரத்தை குறித்து கிண்டல் செய்து பேசி இருந்தனர். அனுஷ்காவுடன் நடிக்கும்போதாவது ஹீல்ஸ் போட்டு நடித்தார். அமிதாப்புடன் நடிக்கும் போது ஸ்டூல் மீது ஏறி நின்றுதான் நடிக்க வேண்டும் என்று கலாய்த்தனர். இந்த வீடியோ ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அந்தப் பெண் தொகுப்பாளினிகளையும் விமர்சித்து சூர்யா ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வசைபாடினர். இதுதொடர்பாக தொலைக்காட்சி நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். அவரது ரசிகர்கள் சன் டிவியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். சமூகம் பயன் பெற உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள்”என்று பதிவிட்டுள்ளார்.