சினிமா

``நடிகர் போண்டா மணிக்கு உதவுவேன்”– திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் வடிவேலு பேட்டி

webteam

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். சிறப்பான வரவேற்புக்குப்பின் முருகனை வழிபட்ட அவர், கோவில் பிரகாரத்தில் உள்ள சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபாட்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இதில் இயக்குனர் மாரி செல்வராஜ்ஜின் மாம்மன்னன் திரைப்படத்தில் தான் குணசித்திர நடிகனாக நடித்து இருக்கிறேன். மாமன்னன் திரைபடத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்துள்ளேன். படம் நன்றாக வந்திருக்கிறது. நடித்து வருக்கின்ற படங்கள் அனைத்தும் காமெடியில் சிறந்ததாக இருக்கும்.

என்னோடு பல படங்களில் தொடர்ந்து நடித்த துணை நடிகர்களுக்கான காமெடி டிராக் தற்போது இல்லாததால் முன்பு போல் அவர்களுடன் சேர்ந்து நடிக்க இயலவில்லை. இப்போது வரும் படங்களிலெல்லாம் தனி காமெடி டிராக் இருப்பதில்லை. தனித்தனி கதாபாத்திரங்களே உள்ளன. என்னுடன் பல படங்களில் உடன் நடித்தவர் நடிகர் போண்டா மணி. அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இருக்கும் செய்தி அறிந்தேன். அவருக்கு நிச்சயம் உதவி செய்வேன். தற்போது நான் நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் அதிகமாகவே இருக்கும். `நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் பாடலும் பாடியுள்ளேன். அந்தப் பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.