AR Rahman - The Goat Life web
சினிமா

‘ரஹ்மானுக்கு விருது கொடுக்காதது அவமானம்’-9 விருதுகளை அள்ளியும் ஆடுஜீவிதம் இயக்குநர் கடும் அதிருப்தி!

Rishan Vengai

54-ஆவது கேரள மாநில திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பை இன்று அம்மாநில கலாசாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் அறிவித்தார். இந்த விருதுகள் பட்டியலில், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் விருகள் உட்பட 9 விருதுகளை தட்டித்தூக்கி ஆடுஜீவிதம் திரைப்படமானது சாதனையை படைத்துள்ளது. ஆனால் 9 திரைப்பட விருதுகளை வென்றிருந்தாலும் அப்படத்தின் இயக்குநர் ப்ளெஸ்ஸி, கேரள மாநில திரைப்பட விருதுக்கான ஜூரிகள் மேல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Aadu Jeevitham

மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவலானது (The Goat Life) அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. மலையாளத்திலிருந்து தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ள ஆடு ஜீவிதம் நாவலானது, கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக்கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளைப் போன்று வாழ்ந்த துயரக் கதையை மையக்கருவாக கொண்டது. 2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆடு ஜீவிதம் (The Goat Life) திரைப்படமானது 10 ஆண்டுகள் தீவிர முயற்சிகளுக்கு பிறகு திரைக்கு கொண்டுவரப்பட்டது. இயக்குநர் ப்ளெஸ்ஸி இயக்கத்தில் நாயகனாக பிருத்விராஜ் மற்றும் நாயகியாக அமலா பாலும் நடித்த இத்திரைப்படம் அதிகப்படியான வரவேற்பை பெற்றது. வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் தற்போது 9 மாநில விருதுகளையும் வென்று குவித்துள்ளது. ஆனால் படத்திற்கு உயிராக இருந்த இசைக்கு எந்தவிருதும் வழங்கப்படாதது இயக்குநர் ப்ளெஸ்ஸியை அதிருப்தியடைய செய்துள்ளது.

ஆடு ஜீவிதம் வென்ற 9 மாநில விருதுகள்:

1. சிறந்த நடிகர் - பிரித்விராஜ் சுகுமாரன் (ஆடுஜீவிதம்)

2. சிறந்த இயக்குநர் - ப்ளெஸ்ஸி (ஆடுஜீவிதம்)

3. சிறந்த ‘பிரபலமான திரைப்படம்’ - ஆடுஜீவிதம்

4. சிறந்த நடிகர் (நடுவர் குழு தேர்வு) - கே.ஆர்.கோகுல் (ஆடுஜீவிதம்)

5.சிறந்த ஒப்பனை கலைஞர் - ரஞ்சித் அம்பாடி (ஆடுஜீவிதம்)

The Goat Life

6. சிறந்த கலரிஸ்ட் - வைஷால் சிவ கனேஷ் (ஆடுஜீவிதம்)

7. சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - ரசூல் பூக்குட்டி, ஷரத் மோகன் (ஆடுஜீவிதம்)

8. சிறந்த திரைக்கதை தழுவல் - பிளெஸ்ஸி (ஆடுஜீவிதம்)

9. சிறந்த ஒளிப்பதிவு - சுனில் கே எஸ் (ஆடுஜீவிதம்)

ஏஆர் ரஹ்மானுக்கு விருது வழங்காதது அவமானம்..

சிறந்த இயக்குனருக்கான விருதை வென்ற பிறகு பேசிய ஆடு ஜீவிதம் திரைப்பட இயக்குநர் ப்ளெஸ்ஸி, படத்தின் உயிராக இருந்தது இசை தான் என்றும், இசைக்கான விருதில் ஏஆர் ரஹ்மானை புறக்கணித்தது மிகப்பெரிய அவமானம் வென்றும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஆடு ஜீவிதம் படத்தின் ஆன்மாவாக இசையே இருந்தது. ஏனென்றால் முழு ஸ்கிரிப்டை உருவாக்குவதில் இசைதான் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. இந்த படத்திற்கு இசை முக்கிய அம்சம் என்பதால் தான் படத்திற்குள் ஏஆர் ரஹ்மானை அழைத்து வந்தோம். படத்தின் பின்னணி இசை அமைப்பதில் அதிக முயற்சியை எடுத்துக்கொண்டார். ஆரம்பத்தில் ஒரு பின்னணி இசையமைத்திருந்தாலும், பின்னர் படத்திற்காக அவர் நிறைய மெனக்கெடல்களை செய்து நிறைய மாற்றி வேலை செய்தார். அப்படி படத்தின் ஆன்மாவாக இருந்த அவரது படைப்புக்கு விருதுகள் பரிசீலிக்கப்படாததை நான் அவமானமாக நினைக்கிறேன்” என்று மனோரமா செய்தியில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ரஹ்மான்

இசை வெளியீட்டு விழாவின் போது ஏஆர் ரஹ்மான் இயக்குநர் ப்ளெஸ்ஸியையும், ஆடு ஜீவிதம் படத்தையும் புகழ்ந்து பேசியிருந்தார். அப்போது, “சினிமா, நல்ல விசயம், கதைகள், மனிதநேயம் போன்றவற்றை நம்பும் பிளெஸ்ஸி மாதிரி ஆர்வம் மிகுந்த இயக்குநருடன் வேலை செய்வது மிகவும் மரியாதைக்குரியது. அவருடன் வேலை செய்வதில் இருந்து பல விசயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். அவர் மிகவும் பொறுமையான மனிதர்.

இந்தப் படம் நம்முடைய பலபேரின் கதையைப் பற்றியது. நாமும் ஏதோ ஒரு வகையில் சிக்கல்களை சந்தித்து வருகிறோம். சில மனிதர்களுக்கு மனச்சிக்கல் இருக்கும் அதுபோல இந்தப் படத்தில் ஒருவர் பாலைவனத்தில் மாட்டிக்கொள்கிறார். இருந்தும் இந்தக் கதையை, பல மனிதர்கள் தங்களுடன் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும். மீண்டும் மலையாளப் படத்தில் இணைவது எனக்கு சொந்த வீட்டிக்கு வந்தது போல் இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு சிறந்த படத்தின் மூலம் வருவது எனக்குப் பெருமையாக இருக்கிறது” என்று பேசியிருந்தார்.